Tuesday, 4 July 2023

தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய கால இலக்கிய வளர்ச்சி

 தம்பதெனிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த முக்கியமான துறையாக விளங்குவது இலக்கியத்துறை ஆகும். அவ்வாறு இலக்கிய துறை வளர்ச்சி அடைந்ததால் இலங்கையிலே அறிவு பாதுகாக்கப்பட்ட காலமாக புகழப்படுகிறது. இங்கே,

               1. மன்னர்களின் ஆதரவு.

               2. பிரிவினாக்களின் எழுச்சி.

               3. அறிஞர்களின் செயல்பாடு.

               4. இலக்கிய வளர்ச்சி.

என்பன இக்காலத்தில் கல்வி, கலாச்சார துறையின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியதை காணமுடிகிறது. இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் அவரது தந்தையாரான மூன்றாம் விஜயபாகு போன்றோரின் பணிகளிலே இத்தகைய எழுச்சி நிலை ஏற்பட்டது.


 மாகனது படையெடுப்பை தொடர்ந்து பொலநறுவை இராசதானி வீழ்ச்சி அடைந்தது. இதனால் இலக்கிய துறையிலே பெரிய அழிவு தோன்றியது. அவ்வேளையில் கல்வித்துறையை வளர்ப்பதில் மூன்றாம் விஜயபாகு ஆர்வம் செலுத்தினான். அந்த வகையிலே அழிந்த இலக்கியங்களை புதுப்பித்து எழுதுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். அந்த வகையில் அழிந்த இலக்கியங்களைத் தேடி எடுத்து தொகுத்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் இலக்கியங்களையும் பெற்றுக் கொண்டான். அது மாத்திரம் அல்லாது மாகனின் படையெடுப்பால் தப்பி ஓடிய அறிஞர்களை மீளவும் தம்பதெயனியாவிற்கு வரவழைத்து இலக்கியப் பணிகளில் ஈடுபடச் செய்தான். "விஜயசுந்தரராமய" என்ற கட்டிடத்தை நிறுவி அங்கே பிரிவெனா கல்வியை நடைபெறச் செய்தான். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பௌத்த பிக்குகளை வரவழைத்து கல்வி மேம்பாட்டுக்கு உதவினான். இவனது முயற்சியால் இலக்கிய துறை பாதுகாக்கப்பட்டது. சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் இலக்கியங்கள் எழுச்சி பெற்றது.


 மூன்றாம் விஜயபாகுவின் பின் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக்கொண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மேலும் பல பணிகளை ஆற்றி இலக்கிய துறையை பலப்படுத்தினான். அந்த வகையிலே தந்தையாரைப் போன்று இலக்கியங்களை புதுப்பித்ததோடு பல இலக்கியங்களையும் எழுதினான். அந்த வகையில்,

  • வனவினி சன்னத
  • விசுத்தி மார்க்க மகா சன்னத
  • கவிசிலுமின

ஆகிய நூல்களை ஆக்கியிருந்தான். மூன்று மொழிகளிலே சிறந்த ஆற்றல் உள்ளவனாக விளங்கினான். பாளி, சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்த இவன் விசுத்தி மார்க்க என்ற பாளி இலக்கியத்திற்கு விளக்க உரை எழுதி விசத்தி மார்க்க மகாசன்னத என வெளியிட்டார். அத்துடன் தான் எழுதிய கவிதைகளை தொகுத்து கவிசிலுமின என்ற நூலாக வெளியிட்டார். அந்த வகையிலே இவன் "கலிகால சாகித்திய சர்வஞான பண்டிதன்" என அழைக்கப்பட்டான். மயூரபாத பிரிவெனா, நந்தன பிரிவெனா, பிரதிராஜ பிரிவெனா, வத்தல பிரிவெனா உள்ளிட்ட பல்வேறு பிரிவினாக்களை நிறுவி கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றினான். "சந்தர்மரத்னாவலிய" என்ற நூலை எழுதிய தர்மசேனதேரர் மற்றும் "பூஜாவலிய, ஜோகார்ணய" போன்ற நூல்களை எழுதிய புத்தமித்திர தேரர் போன்றோர் இவனது அரண்மனையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.  அத்துடன் இக்கால பகுதியில் பல்வேறு இலக்கியவாதிகள் வாழ்ந்து இலக்கிய துறை வளர்ச்சியில் பங்காற்றியதாக தெரிய வருகிறது. அதுமாத்திரம் அல்லாது பிக்குகளும் பிக்குகள் அல்லாதவர்களும் கல்வி கற்க கூடிய வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த வகையிலே "போதற்ய மருந்தகா, ரசவாகினி, சமந்தகூட வண்ணை, தைவக்ஞ காமதேனு, பயோதசித்தை, ஜீனாசரிதம், சிதத்சங்கராவ உள்ளிட்ட பல நூல்கள் இக்காலப்பகுதியில் எழுந்ததாக கூறப்படுகிறது.


 வெதேகதேரர் - "ரஸவாகினி, சமந்தகூடவண்ண, சிதத்சங்கராவ" போன்ற நூல்களை எழுதினார். இங்கு இலக்கண நூல்களும், வைத்திய நூல்களும் எழுந்ததாக தெரியவருகிறது. அந்த வகையில் "ஜோவர்நய" வைத்திய நூலும் "சிதத்சங்கராவ" இலக்கண நூலாகும். இவற்றை விட "லோகார்நய சங்கதா" ஒரு வைத்திய நூலும் ஆகும்.


 எனவே மேற்கூறப்பட்ட வகையில் தொகுத்து நோக்கும் போது தம்பதெனிய காலம் இலக்கியத்துறையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளமையை காண முடிகின்றது. 

No comments:

Post a Comment

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...