இலங்கையில் இடம் பெற்ற பௌத்த பரம்பல்
இலங்கை வரலாற்றிலே கி.மு 3ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பரவலடைந்த சமயம் பௌத்த சமயமாகும். இந்தியாவில் கபிலபஸ்து என்ற இடத்தில் அவதரித்த சித்தார்த்தர் என்ற இயற்பெயர் கொண்ட கௌதம புத்தரினால் மூப்பு, பிணி, சாக்காடு என்னும் மூன்று நிலையாமைக் கருத்துக்களின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது பௌத்த சமயமாகும். அந்த வகையில் இந்தியாவில் தோன்றி வளர்ந்த இச்சமயம் அசோகச் சக்கரவர்த்தி என்ற மௌரிய வம்ச மன்னன் ஆட்சிக்காலத்தில் இலங்கையிலே ஆட்சி புரிந்த தீஸனுடன் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக பரப்பப்பட்டது என தெரிய வருகிறது.
அசோக சக்கரவர்த்தி கி.மு 261 ஆம் ஆண்டு கலிங்க யுத்தத்தின் பின்னர் பௌத்த சமயத்திக்கு மதம் மாறினார். இவ்வாறு மதம் மாறிய அவர் கி.மு 246 ஆம் ஆண்டளவிலே மூன்றாவது பௌத்த மகாநாட்டை "பாடலிபுரம்" என்ற இடத்திலே கூட்டினார் . இந்த மகாநாட்டிற்கு "மகாலிங்க புத்த தேரர்" என்பவர் தலைமை தாங்கினார். இவர் மகாநாட்டின் முடிவிலே பௌத்த சமயத்தை பரப்ப வேண்டுமாக இருந்தால் தர்ம விஜய குழுக்களை நிறுவி (மகாமந்திரர் குழு) அவர்கள் மூலம் பௌத்தத்தை உலக நாடுகளுக்கு பரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதன் பிரகாரம் மகிந்த தேரர் என்பவர் தலைமையில் இத்திய, உத்திய, சமபல, பத்தசால, பண்டுக, உபாசக சுமனசாமனேய ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்று இலங்கை வந்தது. அவ்வாறு இலங்கை வந்த குழுவினர் மிகிந்தலை குன்றிலே தங்கி இருந்தனர். அவ்வேளையில் மூத்த சிவனின் மகனான தீஸன் தனது நண்பர்களோடு மிகிந்தலை பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அவ்வேளையில் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீஸன் தனது நண்பர்களை பிரிந்து தனியே நின்ற போது "ஏய் தீஸா இங்கே வா" என ஒரு குரல் கேட்டது. அவ்வேளையில் குரல் வந்த திசையை நோக்கி தீஸன் திரும்பிய போது அங்கே மகிந்த தேரர் நிற்பதை கண்டார். மஹிந்த தேரரை பார்த்து தீஸன் நீங்கள் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்? எனக் கேட்டான். அதற்கு மகிந்த தேரர் தான் அசோகனது விருப்பின் பெயரில் இலங்கைக்கு பௌத்த சமயத்தை பரப்புவதற்காக வந்ததாக தெரிவித்தார். பௌத்தம் பற்றி கேட்டு அறிந்து கொண்ட தீஸன் தானும் அந்த மதத்தை பின்பற்ற விரும்புவதாகவும் சிறிது நாட்களின் பின் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக கூறி அரண்மனைக்கு திரும்பினார்.
சிறிது நாட்களின் பின் தீஸன் தனது முடி சூட்டு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டான். அசோகனிடம் அரிட்ட குமார என்ற இளவரசன் தலைமையிலான குழு ஒன்றினை அனுப்பி வைத்தான். அவ்வாறு சென்ற குழுவினர் அசோகனிடம் சென்று தீஸன் ஒரு முடிசூட்டு விழாவை நடத்த ஆசைப்படுவதாக தெரிவிக்கவே உடனே அசோகன் முடி சூட்டு விழாவிற்கு தேவையான பொருட்களையும் சில புரோகிதர்களையும் அனுப்பி வைத்தான். "நீண்டவாள், கிரீடம், பட்டாடைகள், முத்துமாலைகள், அரச ஆபரணங்கள்" உள்ளிட்ட பொருட்களையும் அத்தோடு "கல்ல பத்த பதோபம்" (மும்மணிகளிடத்தே நீயும் சரணடைவாய் என எழுதப்பட்ட ஒரு ஓலையையும் அரிட்ட குமாரனிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு தீஸன் மிக பிரமாண்டமான முடிசூட்டு விழா ஒன்றை நடத்தினார். இது தீஸனது இரண்டாவது முடி சூட்டு விழா ஆகும்.
தீஸன் மிகிந்தலையிலே தங்கி இருந்த மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அரண்மனைக்கு வரவழைத்து பௌத்தம் பற்றி உரையாற்ற வாய்ப்பளித்த வேளையில் அங்கே மகிந்த தேரர் உரையாற்றினார். இதனால் பலர் பௌத்த சமயத்தை பின்பற்ற விருப்பம் தெரிவித்தனர். தீஸன் அசோகனது பட்டப் பெயரான "தேவானாம் பிரிய" என்பதை தன் பெயருடன் இணைத்து "தேவ நம்பிய திஸ்ஸ" என மாற்றிக் கொண்டான். அத்துடன் தன்னை பௌத்தனாகவும் மாற்றிக் கொண்டான். சிறிது நாட்களின் பின்னர் மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அனுராதபுரத்திற்கு வரச் செய்து அரண்மனையிலே உரையாற்ற செய்தான். அவ்வுரையை கேட்ட பலரும் பௌத்தத்துக்கு மாறினார்கள். குறிப்பாக தீஸன் பௌத்தனாகவும் அரிட்டன் பௌத்த துறவியாகவும் மாறிக்கொண்டனர். பௌத்த மதம் பரவல் அடைவதைக் கண்ட தீசன் தனது தந்தையாரால் அமைக்கப்பட்டிருந்த மகாமேகவன பூங்காவை பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கினான். மகாமேகவன பூங்காவை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பௌத்த சமயம் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு பௌத்த சமயம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில் இலங்கையில் தூபிகள், விகாரைகள் அமைப்பதற்கு மகிந்ததேரர் விரும்பினார். தனது விருப்பத்தை திஸனிடம் தெரிவிக்கவே தீசன் சுமணதேரர் தலைமையில் ஒரு குழு ஒன்றை வட இந்தியாவுக்கு அனுப்பி அசோகனிடம் நிலைமையை தெரிவிக்கவே அசோகன் பௌத்த கட்டிடங்களை நிர்மாணிக்க கூடிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். குழுவினரிடம் புத்தரது வலது பக்க விலா எலும்பு உட்பட பல பௌத்த புனித பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அப்பொருட்களை முதன்முதலில் மிகிந்தலை குன்றிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. குன்று புனித பொருட்களால் புனிதமடைந்தது என கூறப்படுகின்றது. இப்புனித பொருட்கள் அங்கு வைக்கப்பட்டதால் மிகுந்தலையானது "சேத்தியகிரி" என்றும் "நிசாகபர்வதம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர் பல்வேறு விகாரைகள், தூபிகள் மற்றும் கட்டிடங்களை நிறுவினார்கள் என தெரிய வருகிறது. மகாவிகாரை பகுதியிலே தூபராமதாது கோபம் என்ற தூபி ஒன்றை நிறுவினான். அதனுள் புத்தபிரானது எலும்பு எச்சம் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டது. பிக்குகளுக்காக பிக்கு சாசனம் என்ற கட்டிடமும், பெண் பிக்குகளுக்காக பிக்குணி சாசனம் (மகாபாலி) நிறுவப்பட்டது. இது மகாவிகாரை என அழைக்கப்பட்டது. இசுருமுனிய விகாரை, படன விகாரை, ஜம்புகோள விகாரை, திசமகாராம விகாரை, ஹத்தாஸ்கஹ விகாரை உள்ளிட்ட பல்வேறு விகாரைகள் நிறுவப்பட்டன. பௌத்த கட்டிடங்கள் நிறுவப்பட்டதை தொடர்ந்து இலங்கையிலே கட்டடக்கலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. தீஸன் கட்டடக்கலை, சிற்பக்கலை வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் செலுத்தினான்.
பௌத்த சமயம் பரவல் அடைந்தபோது அனுலா தலைமையிலான சில பெண்கள் துறவறம் போல விரும்பினர். இதற்காக பெண் பிக்குகள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இதற்காக அரிட்டதேரர் தலைமையில் ஒரு தூதுக்குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சங்கமித்தை என்ற பெண் துறவியுடன் ஒரு குழு ஒன்று இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது. இந்தியாவின் தாமிரலிப்தி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை ஜம்புகோளத் துறைமுகத்தை வந்தடைந்தனர். இவர்கள் பாதஜாத்திரியாக அனுராதபுரத்தை அடைந்து மகாமேகவன பூங்கா பகுதியில் சங்கமித்தை இலங்கை வருகின்ற போது அங்கிருந்து கொண்டு வந்த வெள்ளரசு கிளையையும் மகாமேகவன பூங்கா பகுதியில் நட்டு இலங்கையை "ஒரு பௌத்த பூமி" என அழைத்தார். சங்கமித்தாவுடன் இலங்கை வந்த சில மௌரிய குடும்பங்கள் அனுராதபுரத்தில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். சங்கமித்தையிடம் கல்விகற்று அனுலா மற்றும் அவளது குழுவினர் துறவறத்தை பின்பற்றினர்.
இவ்வாறாக தீஸன் காலத்திலே இலங்கையில் பௌத்த சமயமானது நிலைபெற்று பரவி இருந்தமையை காண முடிகிறது.
M. பத்மன்
தெளிவான விளக்கம் கிடைத்தது. நன்றி 🙏🏻Sir
ReplyDelete