Tuesday, 2 May 2023

தேசிய அரசின் பண்புகள்


 தேசிய அரசின் பண்புகள்

 தேசிய அரசு என்பது "வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்குள் ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி போன்றவற்றை உள்ளடக்கி அரசியல், பொருளாதார, கலாசார அடிப்படையில் முழுநிறைவான அதிகாரம் கொண்ட அரசாகும்." அந்த வகையில் தேசிய அரசு என்பது தனக்கென சில பண்புகளை கொண்டிருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் தேசிய அரசானது பல பண்புகளை உள்ளடக்கியதாக காணப்படுவதே சிறப்பாகும்.


 தேசிய அரசு என்பது மிக முக்கியமாக மொழி ரீதியான ஒற்றுமையை கொண்டிருப்பது அவசியமாகும். ஒரே மொழியில் இருப்பதன் மூலம் தேசிய ஒற்றுமை பலப்படுத்தப்படும் அதேவேளை இனரீதியான ஒற்றுமை காணப்படுவதும் இங்கே சிறப்பம்சமாக காணப்பட்டது. மற்றும் தேசிய அரசின் பண்பில் அங்கு மத ரீதியான பிரச்சினைகள் எழாமல் மத ஒற்றுமை காணப்படுவது அல்லது ஒரே வகையான மதம் இருப்பதும் மிக முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது.


 அந்த வகையில் தேசிய அரசானது பல்வேறு பண்புகளையும் இயல்புகளையும் கொண்டது என தெரிய வருகிறது. ஸ்பானியா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் சிறந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.


 அதேபோன்று தேசிய அரசானது நிரந்தரமானதும் வரையறுக்கப்பட்டதுமான எல்லைகளை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. புவிசார் எல்லைகளை கொண்டிருப்பதே நாடு என அரசியலில் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய எல்லைகளை உடையதாகவும் இனம், மொழி, மத அடிப்படையில் ஒற்றுமை தன்மையுடையதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசியல், கலாசார அடிப்படையில் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அங்கே அரசனே முழு நிறைவான அதிகாரமுடையவனாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அங்கே நிரந்தர ராணுவப் படைகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படை, தரைப்படை முதலானவற்றை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்துவதோடு உறுதி வாய்ந்த இராணுவத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

  

  மேலும் அரச ஊதியம் பெறும் உத்தியோகத்தர்களை கொண்டிருப்பதோடு நிரந்தர அரசாங்க சேவையாளர் இங்கே கடமையாற்றுவது முக்கியமானதாகும். அதாவது அரச சேவைப்படை அல்லது ஆளணி ஒன்றை கொண்டிருப்பதோடு அரசன் பிரபுக்களையோ, சிற்றரசர்களையோ, ஏனைய தரப்பினரையோ நம்பி இல்லாது தன்னிடமிருந்து சம்பளம் பெறுகின்ற விசுவாசம் மிக்க கூட்டத்தை தனது நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டு செயற்படல் வேண்டும்.


  தேசிய அரசு நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு சட்ட தொகுப்பை கொண்டிருப்பதோடு தனக்கென யாப்பொன்றை கொண்டிருப்பது அவசியமாகும். இல்லையெனில் நாட்டிற்கென தனியான சட்ட தொகுப்பை உடையதாக இருக்க வேண்டும். அரசன் நாடுகான் பயணத்திற்கு ஊக்கம் அளித்ததோடு பிறநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக காணப்பட வேண்டும். குறிப்பாக நாடுகான் பயணத்தின் மூலம் செல்வங்களை பெற்று அந்த செல்வங்களைக் கொண்டு தனது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதோடு பிற நாடுகளில் இருந்து செல்வங்களை பெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும்.


   பொருளாதாரத்தை பொறுத்தவரையில் தன்னிறைவு பொருளாதாரம் ஏற்பட்டதோடு விவசாயம், வர்த்தகம் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளில் முன்னேற்றமான ஒரு நிலை காணப்படும். இதனால் ஒரு வளர்ச்சி அடைந்த பொருளாதார நிர்வாகத்தை காணலாம். நிர்வாக ரீதியாக அரசன், அவனுக்கு கீழ்ப்பட்ட அமைச்சரவை, நிர்வாக அலகுகள் காணப்பட்டன. புத்தாக்க கண்டுபிடிப்பு தனிப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் முதலானவற்றை அங்கு முக்கியத்துவப்படுத்தினர். இதனால் ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியலையும் உறுதிப்படுத்தும் நிலை காணப்பட்டது. பிரபுக்களின் அதிகாரங்கள் குறைவடைந்ததுடன் சிற்றரசர்களின் செல்வாக்கு இல்லாதொழிக்கப்பட்டு புதிய அரசியல் சிந்தனைகளும் காணப்படும். அதாவது நவீன அரசியல் சிந்தனைகளை உள்வாங்கி அங்கே அரசனும் மக்களும் செயற்படுவதோடு அரசனுக்கு பலம் வாய்ந்த நவீன சிந்தனைகளை கொண்ட ஒரு அமைச்சர்களை கொண்ட கூட்டம் மற்றும் ஆளணியினர் காணப்படுவர்.


 பிரதேச ஆட்சியாளர்கள் செல்வாக்கிலந்தவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக பிரபுக்கள், சிற்றரசர்கள் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை. அரசனே முழு அதிகாரம் உடையவனாக காணப்பட்டார். மதகுருமார்கள் அங்கே செல்வாக்கு மிக்கவர்களாக இருக்க முடியாது. மதகுருமாரின் தலையீடுகள் தடுக்கப்பட்டது. இங்கே "அரசியல் வேறு சமயம் வேறு" என்கிற அடிப்படையில் காணப்பட்ட போதிலும் அரசனே நாட்டினுடைய கலை, கலாசார, பொருளாதார, அரசியல், சமூக விடயங்களுக்கு பொறுப்பானவனாக காணப்படுவான். இளவரசன் என்னும் நூலில் கூறப்படுவது போல் முழு அதிகாரமும் செல்வாக்கும் அரசரிடம் காணப்பட்டது. எந்த ஒரு வெளிச்சக்தியினது செல்வாக்கும் அந்நாட்டின் எல்லைக்குள் இடம்பெற முடியாது. படையெடுத்தல், சமாதானம் செய்தல், வெளிநாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புதல் போன்ற சகல நடவடிக்கைகளும் அரசனாலேயே முன்னெடுக்கப்பட்டன.


      தேசிய அரசானது நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதியை வழங்கக்கூடிய நீதிமன்றத்தை கொண்டிருக்க வேண்டும். அதுமாத்திரம் அல்லாது ஆட்சியாளர் நீதி விடயங்களில் தலையிடக்கூடாது. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அத்தோடு ஆட்சியாளன் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை முன்னெடுப்பான். யாவருக்கும் பொதுவான, நாட்டிற்கு பொதுவான தேசிய வரிக் கொள்கை ஒன்று காணப்படும். பொருளாதார ரீதியாக நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளை அரசன் முன்வைக்க வேண்டும். அதேநேரம் ஒன்றுபட்ட முடியாட்சி காணப்பட வேண்டும். அங்கே அரசனே முடியாட்சிக்கு பொறுப்பானவனாகவும் அவனது நிர்வாக நடவடிக்கைகளுக்கு கீழ்ப்பட்டதாக அனைத்தும் காணப்பட வேண்டும். அங்கே யாரும் தனிப்பட்ட ஆட்சியை மேற்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட ரீதியாக அரசனை கட்டுப்படுத்தவோ அல்லது அரசனது செயற்பாடுகளுக்கு முரணாகவோ செயல்படாத வகையிலே வலுப்படுத்தப்பட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகம் இருப்பதே தேசிய அரசாகும்.


    எனவே மேற்ககூறப்பட்ட வகையில் தேசிய அரசானது பல பண்புகளை கொண்டிருந்ததனை காணமுடிகிறது.



No comments:

Post a Comment

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...