இங்கிலாந்தில் தேசிய அரசு
இங்கிலாந்து தேசிய அரசாக எழுச்சி பெற்ற நாடுகளில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. அங்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் மற்றும் மக்கள் முதலானோரின் தேசிய உணர்வு, அரசியல் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் தேசிய அரசை உருவாக்கியிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து சிறந்ததொரு நிலையை அடைந்திருந்ததென தெரிய வருகிறது. இங்கிலாந்து ஒரு தனிப் பிரதேசமாக காணப்பட்டது. குறிப்பாக சுற்றிவர கடல் காணப்பட்டமை, வெளிநாட்டு தொடர்புகள் அற்ற ஒரு தீவு போன்று காணப்பட்டமை, மிகச்சிறந்ததொரு தனித்துவம் உடைய நாடாக அதனை மாற்றியது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் ஆரம்பத்தில் அது பல துண்டுகளாக பிரிந்து காணப்பட்டது. ரோமானியர்கள் இங்கிலாந்தை கைப்பற்றியதை அடுத்து அங்கே மக்கள் ரோமானியர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். இதுவே அது தேசிய அரசாக உருவாக மிக முக்கியமான காரணமாகும். அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்களுடைய செயற்பாடுகளும் அதனை தேசிய அரசாக மாற்றியது.
நொமண்டில் பிரதேச ஆட்சியாளனாக விளங்கிய முதலாம் வில்லியம் முதலாவதாக நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். பிளவுற்று இருந்த பிரதேசங்களை ஒன்றிணைத்தான். மானிய பிரபுக்கள் அங்கு செல்வாக்கு பெற்றிருந்ததால் அவர்களின் செல்வாக்கை குறைக்கும் நோக்குடன் சவிஷ்புரி என்ற உடன்படிக்கை ஒன்றை செய்து சிற்றரசர்களையும் பிரபுக்களையும் மன்னனுக்கு வரி செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தான். இதனால் மன்னனின் வலிமை அதிகரிக்க மானிய பிரபுத்துவ முறை செல்வாக்கிழந்து போனது. இவன் லண்டியம் என்று அழைக்கப்பட்ட லண்டனை தலைநகரமாகக் கொண்ட அரசை உருவாக்கியமை மிகச்சிறந்த அம்சமாகும்.
கிபி 1154 ஆம் ஆண்டளவிலே ஆட்சிப்பீடம் ஏறிய இரண்டாம் ஹென்றி நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பு ஒன்றை உருவாக்கினான். இதன் மூலம் நாடு முழுவதற்கும் ஒரே வகையான நீதிமுறைகளையும் உருவாக்கினான். பொலீஸ் சேவை, நீதிச்சேவை என்பவற்றை ஏற்படுத்தியதோடு நீதிபதிகளையும் யூரிமாக்களையும் நியமித்து அதன் மூலமாக நீதித்துறையை ஒழுங்கு படுத்தினான். ஒவ்வொரு பிரதேசங்களிலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காவலர்களையும் நீதித்துறையின்ரையும் நியமித்தான்.
இங்கிலாந்து தேசிய அரசாக உருவாகுவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டவன் ஏழாம் ஹென்றி ஆவான். இவன் லங்காஸ்ரர் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்த போதும் ஜோகிற்ஸ் வம்சத்துடன் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்த ரோசாப்பூ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். ஜோகிற்ஸ் வம்சத்தினருக்கும் லங்காஸ்ரர் வம்சத்தினருக்கும் இடையே ஜோகிற்ஸ் வம்சத்தினர் வெள்ளை ரோஜாவையும் லங்காஸ்ரர் வம்சத்தினர் சிவப்பு ரோஜாவையும் சின்னமாகக் கொண்டு இங்கிலாந்திலே யார் ஆட்சியை கைப்பற்றுவதெனும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவ் வேளை லங்காஸ்ரர் வம்சத்தில் வந்த ஏழாம் என்று ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த ரிச்செட் என்பவனை தோற்கடித்து ஜோகிற்ஸ் வம்சத்தை சேர்ந்த எட்வேட் என்பவனது மகளை திருமணம் செய்து மீண்டும் இது வம்சங்கள் இடையே முரண்பாடு வராமல் தடுத்தான். அதேவேளை புதிய வம்சமான தியூடர் வம்சத்தை ஆரம்பித்து வைத்ததன் மூலம் புதிய வம்சம் ஒன்றை தொடங்கிய மன்னனாக காணப்படுகின்றான் இவன் திகழ்ந்தான்.
ஏழாம் ஹென்றி ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்தான். அந்த வகையிலே நாடு முழுவதற்குமான சட்டத்தொகுப்பை உருவாக்கியதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நீதித்துறையை உருவாக்கினான். அந்த வகையிலே நட்சத்திர நீதிமன்றம் (Star Chamber) என்ற பெயரிலே நீதிமன்றம் ஒன்றை நிறுவி சிறந்த நீதித்துறை அமைப்பை உருவாக்கினான். அதுமட்டுமல்லாது நீதியை நல்ல முறையிலே வழங்குவதற்காக சிறந்த நீதிபதிகளையும் யூரிமார்களையும் நியமித்தான். மக்களுக்கு அரசன் மீதும் ஆட்சி மீதும் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தேசிய உணர்வுடன் பிரித்தானியா எழுச்சி பெறுவதற்கு இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
அந்த வகையில் ஆடை உற்பத்தி, பீங்கான் உற்பத்தி, அழகுசாதன பொருட்களின் உற்பத்தி, நிலக்கரி, இரும்பு உற்பத்தி முதலானவற்றிலும் ஆர்வம் செலுத்தினார். இதனால் கைத்தொழில் வளர்ச்சி அடைந்தது. நாடுகான் பயணத்தை மிக முக்கியமான நடவடிக்கையாக மேற்கொண்டதோடு நாடுகான் பயணத்திற்கு பிரான்சிஸ் டிரக்ட், ஜோன்கபெட் போன்றோர்களை ஈடுபடுத்தினார். அத்துடன் பெரும்பாலான துறைமுகங்களை விருத்தியடையச் செய்தான். லிபர்பூல், போபர், மன்செஸ்ரர் முதலிய துறைமுகங்களை விருத்தியடைய செய்து அதன் மூலமாக வெளிநாட்டு வாணிபத்தை ஊக்கப்படுத்தினான். நாடுகான் பயணத்தின் மூலம் பல நாடுகளை கண்டறிந்து குடியிருப்புகளை ஏற்படுத்த செய்தான். இவருடைய காலத்தில் அமெரிக்காவில் பல குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன அந்த வகையில் இங்கு பாரியளவு பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஏற்பட்ட காலமாகவும் இவரது காலம் காணப்பட்டது. கிபி 1485 ஆம் ஆண்டு இவன் ஆட்சிக்கு வந்த காலம் திருச்சபையினதும் பிரபுக்களினதும் அதிகாரத்தை கட்டுப்படுத்தியதோடு மத்தியதர வர்க்கத்தின் எழுச்சிக்கு வழிகாட்டினான். இதனால் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவன் நாட்டில் தன்னிறைவு பொருளாதாரத்தை ஏற்படுத்தினான்.
வெளிநாடுகளில் பல குடியிருப்புகளை அமைப்பதிலும் இவன் மிகுந்த முக்கியத்துவத்துடன் செயற்பட்டான். ஜோன்கபெற் நியூபௌன்லாந்தை அடைந்ததை தொடர்ந்து அங்கு குடியேற்றங்களை அமைத்ததோடு அமெரிக்காவில் பல குடியேற்றங்கள் உருவாக காரணமாக இருந்ததோடு பெருந்தொகை செல்வங்களைக் கொண்டு வந்து பிரித்தானியாவை அபிவிருத்தி அடைய செய்தான். அரசியல் ரீதியாக ஸ்கொட்லாந்து, ஸ்பானியா முதலான நாடுகளுடன் திருமண தொடர்புகளை ஏற்படுத்தினான். தனது புதல்வர்களை வெளிநாட்டு இளவரசர்களுக்கும் இளவரசிகளுக்கும் திருமணம் புரிந்து கொடுத்து வெளிநாடுகளுடன் நட்பை ஏற்படுத்தி இங்கிலாந்தின் முடியாட்சியை பலப்படுத்தினான்.
ஏழாம் ஹென்றியின் பின் ஆட்சி பீடம் ஏறிய எட்டாம் ஹென்றி மிகவும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினான். ஆரம்பத்தில் போப்பாண்டவருடன் நல்ல உறவை ஏற்படுத்தி இருந்த இவன் தனது இரண்டாவது திருமணத்திற்காக போப்பாண்டவரிடம் அனுமதி கூறியபோது அவர் எதிர்த்ததை தொடர்ந்து போப்பாண்டவருடன் முரண்பட்டு கொண்டான். ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தின் பாதுகாவலன் என்றெல்லாம் போப்பாண்டவர் பத்தாம் லியோவால் புகழப்பட்ட எட்டாம் ஹென்றி பின்னாளில் ஏற்பட்ட முரண்பாட்டால் எட்டாம் ஹென்றிக்கும் பத்தாம் லியோவிற்கு இடையில் உறவு நிலை முடிவடைந்தது. இந்நிலையில் எட்டாம் ஹென்றி உரோமன் கத்தோலிக்கம் தனது நாட்டிலே எந்த விடயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவிட்டான்.
உயாராண்மை சட்டம் என்ற சட்டத்தின் மூலம் இங்கிலாந்திலே கத்தோலிக்கத்தில் நடவடிக்கைகள் அனைத்திற்கும் தானே பொறுப்பென கட்டளையிட்டத்துடன் கத்தோலிக்க சமயம் சார் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கே சமய ரீதியான அரசியல் தலையீடுகள் இல்லாத ஒழிக்கப்பட்டது. இதனால் பாரிய அளவிலே இங்கிலாந்தின் எழுச்சி உன்னதமான நிலையை அடைந்தது. இவனது காலத்திலே ஆங்கில திருச்சபை (அங்கிலிக்கன் திருச்சபை) நிறுவப்பட்டதோடு அதன் தலைவராக தானே செயல்பட்டார். பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தனது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்ட இவன் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் மக்களின் நல்லபிப்பிராயத்தையும் பெற்றான். இதனால் இங்கிலாந்து தேசிய அரசு என்று ரீதியில் மிகச்சிறந்த எழுச்சியை பெற்றுக் கொண்டது.
இவன் பின் ஆட்சி பீடம் ஏறிய ஆறாம் எட்வர்ட், மேரி ஆகியோரின் ஆட்சி சொற்ப காலமே இடம்பெற்றதால் அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஆனால் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவியான ஆன்பொலினின் மகளாகப் பிறந்த எலிசபெத் சிறப்பு உடையவளாக திகழ்ந்தார். இவள் ஸ்பானியாவின் ஆர்மடா கப்பல் படையை தோற்கடித்ததோடு மேலும் பலம் வாய்ந்த ஆட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினாள். இவளது காலத்திலே மிகவும் பரந்த சாம்ராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது. பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனி கி.பி 1602ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல நாடுகள் கைப்பற்றப்பட்டன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக் கொண்டது. எலிசபெத் மகாராணியின் ஆட்சியின் போது ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பிரித்தானியாவின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது மாத்திரம் அல்லாது உலகின் அனைத்து கண்டங்களிலும் இங்கிலாந்தின் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது.
எலிசபெத் ஆட்சியின் பின் ஸ்ரூவர்ட் வம்சம் ஆட்சிக்கு வந்தது. அதாவது எலிசபெத் திருமணம் புரியாத காரணத்தினால் எலிசபெத்தின் பின் ஆட்சிக்கு வர எவரும் இல்லாத காரணத்தினால் ஸ்ரூவர்ட் என்னும் புதிய வம்சம் ஆட்சியை கைப்பற்றியது. ஸ்ரூவர்ட் வம்ச காலத்திலே பாராளுமன்றத்திற்கு மன்னனுக்கும் இடையே சமய ரீதியான முரண்பாடுகள் தோன்றின. இதனால் பாரிய அளவிலே புரட்சி ஒன்று கிபி 1688ஆம் ஆண்டு தோன்றியது. இது ஆங்கிலப் புரட்சி எனப்பட்டது. கிபி 1689ஆம் ஆண்டு இங்கு உரிமைகள் தொடர்பான மசோதா ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றத்தினதும் மன்னனதும் அதிகாரம் வரையறுக்கப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து ஒரு பலம் வாய்ந்த தேசிய அரசாக மாறியது.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்கும்போது காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த மன்னர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக மாறியது.
No comments:
Post a Comment