Wednesday, 24 May 2023

இலங்கைக்கு பொருத்தமான கல்வியும் எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களும். (Education appropriate for Sri Lanka and the changes that need to be made in the future.)


  மனித குலத்தின் வளர்ச்சி படியின் முக்கிய அங்கமாக கல்வி அமைந்துள்ளது. இக்கல்வி ஒருவரை சமூகத்தில் சிறந்த பிரஜையாக்குவதை நோக்காகக் கொண்டே அமைகிறது. தற்கால இளைய சமுதாயம் நாளைய உலகின் தூண்களாக வியாபித்து செல்வார்கள். அவ்வாறான இளையவர்களுக்கு கல்வி வழங்குவதை முக்கிய பணியாக அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெடுப்பதைக் காணலாம். அந்த வகையில் இலங்கையில் வழங்கப்படும் கல்வி முறையானது காலத்திற்கு காலம் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் நாளைய சமுதாய வளர்ச்சிக்காக மேலும் வினைத்திறன் கொண்ட பல விடயங்களை உள்ளீர்க்கவும் சில விடயங்களை தவிர்க்கவும் வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
       அந்த வகையில் பல சிறந்த அம்சங்கள் இலங்கை கல்வி முறைமையில் காணப்பட்ட போதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துதல் சிறந்தது எனக் கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் பெரும்பாலும் கல்வி என்பது ஒரு பிள்ளை தனது மூன்று வயதிற்குள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் உறவினர்களது காப்பை விடுத்து முன்பள்ளி என்ற அமைப்பில் இணைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பிள்ளை ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, உயர் கல்வி எனத் தொடர்ந்து செல்வதனை குறிப்பிட முடியும். ‘பிள்ளை ஆரம்ப வயதுகளில் தாயுடனும், அனுபவத்துடனும் கற்க வேண்டியது அவசியம். அது பிள்ளையின் மனவெழுச்சி வளர்ச்சிக்கு உதவும்’ என மரியா மொண்டசூரி அம்மையார் கூறுகிறார்.
       தற்கால உலகு மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனை எதிர்கொள்ளவும் தன்னை ஒரு வினைத்திறன் உள்ளவனாகிக்கொள்ளவும் கல்வி வழிவகுப்பதாக அமைய வேண்டும். அதாவது தொழில்நுட்பத்தில் ஈடு இணையற்ற வளர்ச்சியை தற்காலம் சந்தித்துள்ளது எதிர்காலத்தில் இன்னும் மாற்றம் பெறும் என்பது தெரிந்த விடயம். எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் சமூகத்தில் சிக்கல் இன்றி வாழ தொழில்நுட்ப கல்வியை மேலும் விரிவுபடுத்த வேண்டியது தேவையாக மாறியுள்ளது. அடிப்படை தொழில்நுட்பம் போதிப்பதோடு மட்டுமல்லாது பிரயோக அடிப்படையிலும் சமூகத் தேவைகளை அல்லது தமது தேவைகளை நிறைவேற்றக்கூடியவாறு தொழில்நுட்பக் கல்வியை அமைக்க வேண்டும். மேலும் புத்தாக்கக் கல்வியை ஏற்படுத்த வேண்டியது இலங்கை கல்வி முறையில் எதிர்பார்க்கப்படும் மாற்றமாகக் காணப்படுகிறது. அதாவது உலகத் தளத்தில் இலங்கை இன்றும் வளர்ந்து வரும் நாடாகவே காணப்படுகின்றது. அத்தோடு சமகாலத்தில் பல்வேறு நிதி> நிர்வாக நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றது. இந்நிலைமைக்கு தீர்வு காண மாணவர்களுக்கு தனியே அறிவை கடத்தாது புத்தாக்கத்தை தூண்டவும் படைப்பாக்கக் கல்வியையும் வழங்க வேண்டும். மாணவர்கள் புத்தாக்கங்களை படைக்கும் போது அது நமது சமுதாயத்தையும் நாட்டையும் உயர்த்த வழிவகுக்கும். உதாரணமாக, சிறந்த கல்வி எனக் கூறி பல மாணவர்கள் வெளிநாட்டில் சென்று கற்கின்றனர். அவ்வாறான கல்வியை இலங்கை கல்வி முறைமையில் ஏற்படுத்தும் போது புத்திசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும்.
       மேலும் இலங்கை கல்வி முறையில் பிரயோகக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். சில பாடங்களில் இம்முறை காணப்பட்டாலும் அது எந்த அளவு செயல்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியே. ‘கல்வி என்பது ஒரு நடைமுறை செயல்முறை ஆகும்’ என்ற மக்ஸ் வின்க்ஸ் என்பவரது கருத்து போல வேறு பலரின் கருத்துக்களும் அனுபவம் ஊடாக கற்பிப்பதே சிறப்பான, நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது. எனவே தனியே வகுப்பறை அல்லது கோட்பாட்டுக் கற்றலை விடுத்து பிரயோக கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தோடு தனியே பரீட்சைக்கு தயார் செய்தலையே பெரும்பாலும் இலங்கை கல்வி முறை கொண்டுள்ளது. உதாரணமாக> பரீட்சை புள்ளிக்காக கல்வி என்பது ஒருவரின் தனியாள் விருத்திக்கு சந்தர்ப்பத்தை வழங்காது. அத்துடன் அனைத்து மாணவருக்கும் அது சம வாய்ப்பாகவும் அமையாது. பரீட்சையில் புள்ளி எடுக்க மாணவர் பாடம் பற்றிய விளக்கம் இன்றி மனனம் செய்து பரீட்சையில் சித்தி பெறுவது பலனற்றது. எனப்படுகிறது. "பல்வகைமை கொண்ட மாணவரிடையே பரீட்சையை மட்டும் வைத்து அவரது நிலை கணிக்கப்படுவதால் அது சம வாய்ப்பாக அமையாது" என ஹவர்ட் கார்ட்னர் கூறியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
         மேலும் இலங்கை கல்வி முறையில் உள்ள ஒரு குறையாக மதம்சார் பாடசாலைகள் கருதப்படுகிறது. அதாவது பல்லின நாட்டில் தனியே மதம் சார்பான பாடசாலைகள் சமூகத்திலும், கல்வியிலும் வேறுபாட்டை பிரதிபலிப்பதாக அமைகின்றது. உதாரணமாக வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் இடத்தில் இப் பண்பு அங்கு இல்லை என்று கூறலாம். சிங்கபூர், பின்லாந்து போன்ற நாடுகளை போல் சமத்துவக் கல்வியை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் எம் நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாடுகளின் அழிவுகள் போல இனியும் ஏற்படாது தடுக்க ஜாதி மத பேதமின்றிய கல்வியை அமுல்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
         மேலும் அரசியல் கல்வியை வழங்க வேண்டியது இலங்கை கல்வி முறையில் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாக கருதப்படுகிறது. அதாவது ஒரு சரியான அரசியல் தெளிவு மற்றும் பெண்கள்> பின்தங்கிய மக்கள் மற்றும் படிப்பறிவற்ற மக்களின் அரசியல் ஈடுபாடு போன்றன குறைவாக காணப்படுகின்றது. உதாரணமாக “ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன” என எண்ணுகின்றனர். அதனால் இடைநிலை கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தில் அரசியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்வதன் முக்கியத்துவம் பற்றிக் கற்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் நிலை மற்றும் அரசியல் அறிவு கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும்.
        எனவே மேற்கூறப்பட்டவாறு தொகுத்து நோக்கும் போது கல்வி என்பது ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. இளைய சமுதாயத்தின் தனியார் விருத்திக்கும் நாட்டு அபிவிருத்திக்கும் அந்நாட்டு கல்வி உதவ வேண்டும். அவ்வகையில் இலங்கை கல்வி முறைமையில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது இளைய தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

M. Pathman

1 comment:

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும...